siruppiddy

வெள்ளி, 2 மே, 2014

ஊடக சுதந்திரம் இலங்கையில் இல்லை! அச்சுறுத்தல் :

உலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை கீழ் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் ஊடகங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் தமது பணிகள் காரணமாக உலகம் முழுவதும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதேபோல் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கடினமான பின்னணியில் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன.

2000 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதுடன், அதற்கான நீதி வேண்டி அவர்களின் குடும்பங்கள் இன்னும் காத்துள்ளனர் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்தார்.

கடந்த கால குற்றச் செயல்கள் குறித்து விசாரணைகளை நடத்தி, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் உறுதியான கடப்பாட்டை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.

நாம் பரந்த உலக மாற்றத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். செழுமை மற்றும் மனித உரிமைகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறான ஜனநாயக சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, கருத்துச் சுதந்திரம், கலாசார தொடர்பில் சமூகத்தின் ஊடான மாற்றங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த ஜனநாயக மதிப்புகள் தொடர்பில் எமது பங்காளர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என பிரித்தானியா நம்புகிறது.

உலக ஊடக சுதந்திர தினத்தில் கருத்துச் சுதந்திரத்தை பின்பற்றுவதில் நாம் தமது உறுதிப்பாட்டை புதுப்பிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com