siruppiddy

வியாழன், 8 மே, 2014

தமிழர் அமைப்புக்கள் கனடாவில் ஒன்றுபட்டு முன்னெடுக்கும் -18 துக்க நாள்


முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை, கனடாவில் தமிழர் அமைப்புக்கள் பலவும் ஒன்றாக முன்னெடுக்கவுள்ளன.
இதனை கடந்த மே-6ம் நாள் செவ்வாய்கிழமை ரொறன்ரேவில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
கனடாவின் ரொறன்ரோ, ஒட்டோவா, மொன்றியல், எட்மண்டன் ஆகிய பிரதான பெருநகரங்களில் தமிழீழத் தேசியத் துக்க நாள் நிகழ்வுகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு அமைப்பினையும் முதன்மைப்படுதாமல் , பொதுமக்கள்  நிகழ்வாக மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை முன்னெடுக்க இருப்பதாக, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு வின் மகாலிங்கம் அவர்கள் உத்தியோகபூர்வ அறிக்கையினை வாசித்து அகவணக்கத்துடன் ஊடக சந்திப்பினை தொடங்கி வைத்திருந்தார்.
பொதுமக்களின் நேர வசதியினைக் கருத்திற்கொண்டு, மே-18 காலை 11மணி முதல் மாலை 5 மணி வரை நினைவேந்தல் வணக்கத்தினைMarkham and Milner சந்திப்பில் அமைந்துள்ள, St peter and Paul உள்ளக மண்டபத்தில் ஓருங்கு செய்துள்ளதாக ஊடக அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் உரைகள் ,சர்வமதப் பிரார்தனைகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் யாவும் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கொத்துக் கொத்தான படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமிப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும்,  ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாகவே கருதப்படுகின்றது.
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர் திரு சு.இராசரத்தினம், தமிழ் படைப்பாளிகள்  கழகத் தலைவர் திரு வேலுப்பிள்ளை தங்கவேலு, கனடியத் தமிழர் பேரவைப் பொருளாளர் வைத்தியக் கலாநிதி சாந்தகுமார், கனடாத் தமிழர் இணையத்தின் தலைவர் திரு நாதன் வீரவாகு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்  திரு. நிமால் விநாயகமூர்த்தி  ஆகியோர் இக்கூட்டு முன்னெடுப்பு குறித்து கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
தொடர்ந்து ஊடகங்கத்துறையினரது  கேள்விகளுக்கு வழங்கிய பதில்களின் முக்கிய தொகுப்பு :
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், பலமாக எதிர்கொள்ள ஒவ்வொரு அமைப்புக்களும் புரிந்துணர்வோடு ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறு ஒன்றுபடுவதற்கான பொதுப்புள்ளியாகவும் பொதுமக்கள் நிகழ்வாகவும் மே-18 வணக்க நாள் இருக்கின்றது.
தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசுகளது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்பது பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே தொடங்கி, கடந்த 2009ம் ஆண்டில் உச்சம் தொட்டு, இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.  இனஅழிப்புக்கு பரிகார நீதியினை வேண்டி எமது விடுதலை அடைவதற்கே அனைவரு நோக்கமாக இருக்கின்றது.
சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கொத்துக் கொத்தான படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமிப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும்,  ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாகவே கருதப்படுகின்றது.
ஈழத்தமிழ் தளத்தினை மையமாக கொண்டு இயங்குகின்ற ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக அத்தியாவசியமானவை.மக்களுக்கான இந்த பொதுநிகழ்வில் அனைத்து மக்களும் பங்குபற்றிப் பயன்பெறச் செய்ய ஊடகங்களால் மட்டுமே  முடியும்.அதைச் செய்ய வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு ஊடகவியலாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு வழங்கப்பட்ட பதில்களின் கருத்து அமைந்திருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com